நல்ல நேரம்

ஞாயிற்றுக்கிழமை மாலைப்பொழுது. வாரம் முழுதும் ஓடித் திரியும் மனித எந்திரங்களுக்கு ஓய்வளிக்கும் ஒருநாள். எதனைத் துரத்துகிறோம் என்றறியாமல்  நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒருவன், தான் விரும்பியதை யெல்லாம் செய்து முடிக்க வேண்டும் என விரும்பும் ஒருநாள். ஆனால், உறங்கிக் கழிப்பதிலே பாதியும் திங்கள் கிழமையைப் பற்றிய அச்சத்தில் மீதியுமாய் முடிந்து போகிறது. 

கதை எழுதவேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை இன்றாவது அடைந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான் அவன். வீட்டிலுள்ள அனைவரும் கடற்கரைக்குச் சென்றுள்ளதால் அடுத்த சிலமணி நேரங்களுக்கு தொந்தரவுகள் ஏதுமிருக்காது என்று எண்ணிக்கொண்டான். ஒவ்வொரு புத்தாண்டின் போதும் தான் எடுக்கும் , ''இந்த வருஷத்தில இருந்து டைரி எழுதனும்" தீர்மானத்திற்காக வாங்கிய டைரிகளில் ஒன்றும் பேனாவும் அவன் முன் இருந்தன. உதவிகள் பல செய்தாலும் தன்னை அநேக வேளைகளில் உருப்பட விடாமல் செய்யும் தன் நண்பனான அலைபேசியை தன்னுடன் அழைத்துவர வில்லை.

தான் எழுத நினைத்த கதையின் போக்கு எவ்வாறாக அமையவேண்டும் என்பதை தொடக்கம் முதல் இறுதி வார்த்தை வரை எப்போதோ மனதிற்குள் தயார் செய்துவைத்து விட்டான். இருப்பினும் அதை எழுதுவதில் ஏனோ அவனுக்கு எப்போதுமே ஒரு தயக்கம். என்னதான் தயக்கம் என்று தனக்குத்தானே சப்பைக்கட்டு கட்டிக்கொண்டாலும், அது அவனது சோம்பேறித்தனம் என்பதை வெளியிலிருந்து யாரும் சொல்லி அவனுக்குத் தெரியவேண்டியதில்லை.  தனது எழுத்தாளர் கனவினை ஆரம்பத்தில் நண்பர்களிடம் சொன்னபோது அவர்கள் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் இப்போது கிடைப்பதில்லை. "அவன் எவ்ளோ நாளைக்கு தான் சொல்லிட்டே இருப்பான்? செஞ்சா பாத்துக்கலாம்" என்று நண்பர்கள் அவனது காதுபடவே பேசினர்.

அவன் எதிர்பார்த்திருந்த அனைத்து சூழல்களும் சரியாகவே அமைந்தன. சூரியன் தனது உக்கிரத்தைக் குறைத்து வைட்டமினை வழங்கிக் கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு மாடியில் காயப்போடப்பட்டிருந்த துணிகள் அசைந்து கொண்டிருந்தன. சிலப்பதிகாரத்தில் கோவலனும் கண்ணகியும் மதுரை நகருக்குள் நுழையும்போது, அவர்களுக்கு எச்சரிக்கை அளித்த பாண்டிய நாட்டுக் கொடியைப்போல் அல்லாமல், பக்கத்து வீட்டுத் துணிகள் இவன் கூறவிருக்கும் கதையைக் கேட்டு ஆர்வத்துடன் தலையசைப்பது போல மேலும் கீழுமாய் அசைந்தன. இவன் எழுதப்போகும் அழகை ரசிக்க சுற்றுவட்டாரம் முழுமையிலும் இருந்து கூட்டம் கூட்டமாக புள்ளினங்கள் வானில் பறந்து கொண்டிருந்தன.  அவை பாடிய பாடல்களும், வீட்டு மாடியில் பூத்திருந்த அந்தியாவட்ட மலர்களும் இவனுக்கு உற்சாகத்தை அளித்தன. தமது முரசுக்கட்டிலில் படுத்துறங்கிய புலவனுக்கு சாமரம் வீசிய தமிழ் மன்னனைப்போல, வீட்டைச் சுற்றிலுமிருந்த மரங்கள் இந்த அறிமுக எழுத்தாளனைத்  தென்றலால் தீண்டிக்கொண்டிருந்தன.

டைரியைத் திறந்து முதல் பக்கத்தில் பிள்ளையார் சுழி போட்ட சமயம் அருகிலிருந்த தேவாலயத்தில் மாலை ஐந்து மணிக்கான அறிவிப்புடன் மணி ஒலித்தது. பல்லிகள் உச்சக்கொட்டுவதும் மணி அடிப்பதும் நல்ல சகுனங்கள் என்று சிறுவயது முதலே கேட்டுப்பழகிய இவனுக்கு இதுவும் நேர்மறையாக தோன்றிய மறுகணமே, ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கரை மணி முதல் ஆறு மணிவரை இராகு காலம் என்பது நினைவுக்கு வந்தது. "முதல் கதையை ஏன் இராகு காலத்தில் எழுதிக்கிட்டு? ஆறுமணிக்கு மேல எழுதுவோம்" என்று முடிவெடுத்தவன், வீட்டுக்குள் சென்று தனது நண்பனை ஆசையுடன் அள்ளி ஏந்திக்கொண்டான்.

கருத்துகள்

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

  2. Waiting.., for next week.....with "RAAGUKAALAM" sunday☺️👍👍

    பதிலளிநீக்கு
  3. 4th para vera level nanba! Ending also super! Crisp ah irundhuchu Kovalan kannagi connect was awwwwww! Keep going ~ malalai Kavingan

    பதிலளிநீக்கு
  4. Nice da , kadha elutha epo start panva,

    Jokes apart its very good and realistic.

    பதிலளிநீக்கு
  5. Wowww wowww அருமையோ அருமை 💜💐✨.. அதுவும் கோவலன், கண்ணகியின் உவமைலாம் வேற லெவல்... உங்கள் எழுத்தாளர் பயணம் மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்💐💐💐✨✨🎂

    பதிலளிநீக்கு
  6. காலமும் கடந்து சென்றது. அடுத்த முறை பிரம்ம முகூர்த்தத்தில் எழுதவும். 😂

    பதிலளிநீக்கு
  7. ஹா ஹா ஹா அந்த நண்டனை முதல்ல போட்டுத் தள்ளணும்🤣

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்யாண சாவு

தீர்ந்த நீரும் தீராத் தாகமும்