சமத்துவம் நிலைப்பது சாத்தியமா???





ஏன் தான் இந்த பிரிவோ எங்கும்?
இது தான் நம் சரிவோ என்றும்?

உயிர்களாக உலகில் உருவாகினோம் - பின்பு,

இனம் கண்டோம், விலங்கென அடைத்தோம்..
நிறம் கண்டோம், நாடென பிரிந்தோம்..
மொழி அறிந்தோம், மாநிலம் ஆனோம்..
மதம் கொண்டோம், இறைவனையும் பிரித்தோம்..
சாதி கொண்டோம், தாழ்ந்தவன் என ஒதுக்கினோம்..

இன்று,
பணம் கொண்டோம், இதயத்தை இழந்தோம்....


பிரிவுக்குள் பிரிவைத் தேடி பிணத்தில் தான் முடிகிறோம்.

உயிர்களைப் பிரித்தான்,
உரிமைகளைப் பறித்தான்..

'பெற்றவன் உயர்ந்தவன்,
இழந்தவன் தாழ்ந்தவன்' என உரைத்தான்.


சாதித்தவரின் பெயரைச் சூட்டி - நெடுஞ்
சாலையோரம் சிலையைக் கட்டி - பொது
சந்திப்பில் கொடியை நாட்டி - தன்
சாதியை உயர்த்திக் காட்டி - சண்டையில்
சான்றோரை எவனோ இழிவுப்படுத்த - நாம்
சதியால் வீழ்வது தான் சரியா?

தவறுகள் இழைத்திட
தலைமுறைகள் அழிந்திடுமே...

சதியோ இல்லை விதியோ
சாதியை சொல்லி சாகலாமா???
நீதியை வளர்த்து வாழலாமே!!!

ஏற்றதாழ்வு எண்ணத்தில் நிலைத்தால்,
ஏட்டில் நீதி
 இருந்தென்ன பயன்?

ஏற்றத்தாழ்வை எண்ணத்தில் அழித்தால்,
ஏட்டில் சாதி இருந்தென்ன பயன்?

அணுவை வீச அழிந்திடுமா???
அன்பை வீசினால் அடங்கிடுமே!!!

மனிதக் காட்டில், மனிதன் மூட்டும் காட்டுத் தீயே - சாதித் தீயோ???
வசித்த வனத்தின் வளமை அழிப்பது சரியோ???
மனதின் வழியே எங்கும் பொழியும் அன்பே - சமத்துவ மழையோ
வனத்தின் வேற்றுமைத் தீயை அணைக்கும் வழியோ!!!

சாதித் தீயில், நீதி எறிய...
சாலை எங்கும் இரத்தம் உறைய,
சமத்துவம் நிலைப்பது சாத்தியமா???

எதிரில் இருப்பது 'நீ' என எண்ணாமல்,
"நான்" என நினைத்தால் நித்தமும் சாத்தியமே...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்யாண சாவு

தீர்ந்த நீரும் தீராத் தாகமும்

நல்ல நேரம்